July 12, 2015

கவுனாவத்தை வேள்வியும் தமிழ்த்தேசியத்தின் அரசியலும்!! வேள்வி ஆடுகளாக அப்பாவித் தமிழர்கள் !

பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல்கள் மும்முரமடைந்துள்ளன.

கடந்த தேர்தலைப் போலன்றி இம்முறை தேர்தலில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தாராளமாகக் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகையதொரு நிலைமை தமிழர்களின் ஒற்றுமையீனத்தை மட்டுமன்றி தமிழர்களுக்கு தரமான அரசியல் தலைமைகள் வாய்க்கவில்லை என்பதையும் குறித்து நிற்கும்.
தமிழினம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தலைமை இருந்திருக்குமாயின், இத்தகையதொரு போட்டிக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டால், அவர்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பர் என்ற முட்டாள் தனமான சிந்தனைகள் இன்று தமிழினத்தின் அரசியலை சின்னாபின்னப்படுத்தியுள்ளது.
அரசியலிலும் இருக்க வேண்டும். பதவி, பணம் இவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், மக்கள் பணிக்கும் இளைஞர்களை வழிப்படுத்துவதற்கும் முடியாது என்றால், கட்சியை மட்டுமல்ல கட்டிய கவசணத்தையும் இழக்க வேண்டி வரும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேடையேறி பேசிவிட்டு மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் முறைமை பாடை ஏறிவிட்டது. முன்பு வடபுலத்தில் பல கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் தேர்தல் களத்தில் குதித்தால் தென்பகுதி அரசியலின் விளையாட்டு என்று பிரசாரம் செய்யலாம்.
கூடவே பணத்திற்கு விலை போனவர்கள் சுயேட்சைக் குழுக்களாகப் போட்டியிடுகின்றனர் என்று கூறிவாக்குப் பெறலாம். ஆனால் இப்போது வடபுலத்தில் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கவுள் ளன.
இதற்கும் தென்பகுதி அரசியலா? காரணம். இப்போதாவது உண்மையை உணர்ந்து கொள்ள தமிழ் அரசியல்வாதிகள் முன்வரவேண்டும். சேடம் இழுக்கும் போதாவது அருகில் இருப்பவர் ஓதும் திருவாசகத்தைக் கேட்க விரும்ப வேண்டும்.
இதைவிடுத்து இழுப்பது சேடம் இறக்கப் போவது பதவி என்பதையும் அறியாமல் நின்று நாடகமாடினால் தமிழினத்தின் எதிர்காலம் என்னவாகும். தமிழகத்தில் நூற்றெட்டு கட்சிகள் இருக்கலாம் ஆனால் அதிமுகவும் திமுகவுமே பிரதான கட்சிகள் மற்றவை எல்லாம் சிறுகட்சிகள்.
இலங்கையின் தென்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுமே பலமான பெருங் கட்சிகள் மற்றையவை உதிரிகள்.
இந்தியாவிலும் காங்கிரஸும் பாரதிய ஜனதாவுமே பிரதானமானவை. இந்த நடைமுறை அனேக நாடுகளுக்குப் பொருந்துபவை. ஆனால் எங்கள் தமிழினத்தில் மட்டும் தான் அரசியல் கட்சிகள் இல்லை ; வேட்பாளர்கள் இல்லை; கட்சி ஆதரவாளர்கள் இல்லை; கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி போல; ஒருநாள் எல்லோரும் ஒன்றுகூடி கிடாய் வெட்டி ஏலம் போட்டு கொண்டாடுவதாக, எங்கள் தமிழினத்தின் அரசியலும் தேர்தல் என்றால் ஒன்றுகூடி வேட்பாளர்களைத் தேடிப்பிடித்து போட்டியிடுவது என்றாகி விட்டது.
பலமான அரசியல் என்றால் கட்சிக்காக காலா காலமாகப்பாடுபட்ட தொண்டர்கள்; கட்சி ஆதரவாளர்கள்; தன் தொகுதியில் இருந்து மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து சேவை செய்த வேட்பாளர்கள் இப்படியல்லோ அரசியல் நடத்த வேண்டும்.
இதைவிடுத்து சுத்துமாத்துகளில் அரசியல் நடத்தி விட்டு வேள்வி முடிந்தது மக்கள் ஏமாந்தனர் பதவியும் பணமும் கிடைத்தது என்று விடை பெற்றால், நிலைமை எப்படியாகும் என்பதற்கு இந்தத் தேர்தல் நல்ல உதாரணம் இருந்து பாருங்கள்.

No comments:

Post a Comment