May 20, 2016

தளபதி ஜெயம்................!

என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி தமிழீழத்தில் கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தில் பொது மக்களுக்காக மூன்று நாட்கள் நடைபெற்றது.

அதன் பிறகு போராளிகள் முக்கிய தளபதிகள் பார்வையிடுவதற்கு வசதியாக, தூயவன் அரசறிவியல் கல்லூரியில் ஒரு நாள் நடைபெற்றது. அக் காட்சியைக் காண தளபதி ஜெயம் அவர்கள் தன் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்.
அவர் உள்ளே வந்தபோது நான் சில பெண் போராளிகளுடன் உரையாடிக் கொண்டிருந்ததால்…. நேரடியாக ஓவியங்களைப் பார்க்கச் சென்று விட்டார். பிறகு தான் அரசறிவியல் கல்லூரி முதல்வர் அரசண்ணா அவர்கள் “தளபதி ஜெயம்” வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

அதன் பிறகுதான் நான் கவனித்தேன். ஓவியங்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்…. அருகில் துவக்குடன் அவரது பாதுகாவலர். அவரது கவனத்தை சிதைக்க நான் விரும்பவில்லை. நீண்ட நேரம் ஒவ்வொரு ஒவியத்தையும் நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு, என் கையைப் பிடித்து பாராட்டுத் தெரிவித்தார்.

அதுதான் எங்கள் முதல் சந்திப்பு… அதன் பிறகு ஓவியங்களைப் பார்த்துவிட்டு வந்த அவர் மனைவியை அறிமுகப் படுத்தினார். அவரும் ஒரு போராளி. அவர் குழந்தைகளையும் அறிமுகப் படுத்தினார்… பிறகு நீண்ட நேரம் ஓவியங்கள், இந்திய, தமிழக அரசியல் நிலவரம் குறித்து உரையாடினோம்…

அதன் பிறகு பல முறை சந்தித்திருக்கிறோம்… பெரும்பாலும் அறிவமுது ரமேஸ் (இளங்கோ) பேசில்தான் (இடத்தில்) அதிகமுறை…. மிகவும் நட்புடனும் அன்புடனும் பழகுகின்ற அறிவுபூர்வமான மனிதர். போராட்டத்தில் எந்த சமரசமும் இல்லாத உறுதிமிக்கத் தளபதி…. “விசுவாசத்திற்கு மறுபெயர் ஜெயம். அவரைப் போல் ஒவ்வொருப் போராளியும் இருக்கவேண்டும்” என்று அண்ணன் பிரபாகரன் அடிக்கடி கூறுவதாக சொல்வார்கள். அப்படிப்பட்ட உறுதிமிக்கப் போராளியாக, தளபதியாக திகழ்ந்தவர் ஜெயம்.




No comments:

Post a Comment