July 25, 2016

மட்டக்களப்பு- காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மனைவி, குழந்தை, மாமனார் வெட்டிக்கொலை! - கணவன் வெறிச்செயல் !

மட்டக்களப்பு- காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் தனது மனைவி, ஒன்றரை வயதுக் குழந்தை, மாமனாரை வெட்டிக் கொலை செய்து கிணற்றில் வீசியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது 24), பிரசாந்தன் சஸ்னிகா (வயது 18 மாதங்கள்) மற்றும் கந்தையா பேரின்பம் (வயது 56) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டனர்.

 
மனைவியும் குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நள்ளிரவைத் தாண்டி வீட்டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது 34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியுள்ளார். இவ்வேளையில் அயல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜித்தாவின் தந்தையான பேரின்பம் தனது மகள் விஜித்தாவினதும் பேரக்குழந்தையான சஸ்னிகாவினதும் அவலக் குரல் கேட்டு ஓடிவந்த பொழுது கொலையாளியான மருமகனான பிரசாந்தன் மாமனாரையும் தாக்கியுள்ளார்.

வெட்டப்பட்ட விஜித்தாவின் தந்தை பேரின்பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் முன்னதாக சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர் அக்குடும்பத்தின் தலைவன் என்பதை ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்ட பொலிஸார் காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் மறைந்திருந்தபோது இன்று காலை அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கணவனுக்கும் மனைவிக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்பத் தகராறே இந்தப் படுகொலைக்கு காரணமாய் அமைந்துள்ளதென்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடைசியாக கடந்த வெள்ளியன்றும் கணவன்- மனைவி ஆகியோர் அழைக்கப்பட்டு வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றன.








No comments:

Post a Comment